Sunday, March 20, 2011

கனவும் காட்சியும்!!!


வள்ளுவன் வாக்கு!
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்;
ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவின்றித்

தாழாது உஞற்றுபவர்;

கனவும் காட்சியும்!!!

உணவு மட்டுமே இவர்களுக்கு உணவாய் இருக்கின்றது,
கனவுதான் உணவு என்பதே இவர்களுக்கு
தெரியவில்லையென்று! --(ஜேஜே சில குறிப்புகளிலிருந்து)
அதென்னவோ இன்றைக்கும் நிஜமாய்த்தான் இருக்கிறது.

கனவு காணுங்கள்! கனவு காணுங்கள்! கனவுகள் தான்
நிஜத்தின் பாதை, கனவுகள் தானே நாளை என்பதையே
நம் கண்களுக்கு காட்டுகின்றன.

"கண்ட கனவு பலித்தால்" என்பதுதானே
பல நேரங்களில் நாளையே நமக்கு துவக்கி வைக்கின்றது!
மாற்றியும் வைக்கின்றது.

விடியலில் உறக்கத்தை வழியனுப்பும் கனவு
நம் மனதை நிறைக்கா நாளேது?

உறக்கத்தின் கனவுகளில் சில
உலகத்திற்கே வழி காட்டியிருக்கின்றன.
உறக்கத்திற்கு மட்டுமல்ல,
விழிப்புக்கும் கூடத்தான் கனவு சொந்தம்.

விழிப்பின் கனவு சிறப்பான கனவு,
சிந்தையின் உச்சத்தின் வந்த கனவு அது!
செயலின் உச்சத்தில் வரும் கனவும் அதுவே!

விழிப்பின் கனவு வேறெதுவுமில்லை,
முனைப்பின் கனவு அது,
தியானத்தின் கனவு அது,
போதியினடியில் புத்தன் கண்ட கனவு அது.

நாளையின் பாதையை நமக்கு மட்டுமல்ல
உலகுக்கே மாற்றியமைக்கும் சக்தி கொண்டது அது .

கனவை காட்சியாக்கும் முயற்சியில்தான்
உலகே இயங்கிக் கொண்டிருக்கின்றது,
மறுக்க முடியாத உண்மை இதுதானே!!

நமது கனவென்ன?
எல்லோருக்கும் நல்லன எல்லாம் கிட்ட வேண்டும் என்பதுதானே!

நம் கனவும் காட்சியாகட்டும்,
நம் கனவையும் அயரா உழைப்பையும்
அதற்கே விலையாய் இன்றே தருவோம்!!

நம்புங்கள் நாட்கள் எல்லாம் பொய்,
இன்றின் கனவுகளும் நாளையின் காட்சியும் மட்டுமே உண்மை!

கனவு காணுவோம்! கனவு காணுவோம்!!

Thanks : http://nallathunadakattum.blogspot.com

No comments:

Post a Comment