பிண்டானுபவ இலக்கணம்
மனித தேகத்தில் கோசத்திற்கு இரண்டரை அங்குலத்திற்குமேல் நாற்சதுரமான ஒரு பையுண்டு. அதில் 16 வயதளவும் உண்டாகும் இந்திரியம் ஜலமாகச் சேருகின்றது. அதைத்தான் மானசதடாக மென்று சொல்லுகின்றது. 16-க்கு மேல் சேரும் இந்திரியம் உறைந்த அந்த ஜலத்திற்கு மத்தியில் சேருகிறது. அப்படியாகச் சேர்ந்து கொண்டு வரும் இந்திரியம் பொன்வர்ணமாக இருக்கும். அது தாமரைப்பூ வென்று சொல்லப்படும். அதன் மத்தியில் ஒரு ஆவி சாதாரண காற்றுக்கு நூற்றிலொரு பங்காக வெகு நேர்மையாக இருக்கும். அதன் வண்ணம் பொன்மயமாயிருக்கும். அதற்கு அதிஷ்டான தெய்வம் பிரமனென்று சொல்லப்படும். அந்த ஆவி உண்டாகுங் காலம் அவருக்குச் சகலகாலம் என்றும் அடங்குங் காலம் கேவலகாலம் என்றும் சொல்லப்படும். அந்த ஆவி உண்டாகுங் காலத்தில் செயற்கையானால் கருத்தரிக்கும். அது சிருட்டியென்று சொல்லப்படும்.
அதில் ஆவியுண்டாகத் தொப்புளிலிருந்து ஒரு நாடி தோன்றி அதன் மத்தியில் முகந்து கொண்டிருக்கிறது. அதன் மூலமாய் அக்கினியி ருக்கின்றது. அது மூலாக்கினி என்று சொல்லப்படும். அது தொப்புளிலிருந்து உண்டாவதால் விஷ்ணு தொப்புளிலிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அதன் மேல் இரண்டரை அங்குலத்தில் உந்திக்கு நேராக உட்பாகத்தில் சதுரமாய் ஒரு பையுண்டு. புசித்த அன்னத்தை ஐந்து நாழிகையில் பால் போன்ற ஜலமாய் ருத்திர பாகத்திலுள்ள ஆவி பிரித்து அந்தப் பையில் சேர்க்கின்றது. அதை க்ஷீராப்தி என்று சொல்லுகிறது. அந்தப் பையிலிருக்கும் பால் போன்ற ஜலத்தின் மேல் ஆலிலை வடிவையுடைய வயிற்றி னுட்பாகம் படிவதனால் அதே வண்ணமாக ஓராடை கட்டியிருக்கும். அதை ஆலிலையென்று சொல்கின்றது. அந்த ஆடையின் மேல் ஒரு நரம்பு வட்டமாய்த் தலை தூக்கியிருக்கின்றது. அதைச் சேஷனென்று சொல்லுகின்றது. அந்தக் குண்டலி வட்ட சேஷனென்னும் நாடி மத்தியில் செம்பினது களிம்பு போன்ற பச்சை மேனியா யொரு சத்தியுண்டு. அதை விஷ்ணுவென்றும், அச்சத்தியில் முன் பின் நடுவென்னும் இடத்தில் அதன் காரணச் சத்து பொன் வண்ணமாயும் அரித்திராவண்ணமாயும் குங்கும வண்ணமாயும் மூன்று உள்ளன. அவற்றைச் சீதேவி, பூதேவி, நீளாதேவியெனச் சொல்லுகின்றது. மத்தியில் ஒரு சத்தியிருப்பதால் விஷ்ணு மார்பில் லக்ஷ்மியை வைத்தாரென்பது.
குண்டலிவட்டமான நாடி மத்தியிலுள்ள பச்சை வண்ணமான சத்தியிலிருந்து ஒரு நாடி உண்டாய் இரண்டு தலையாய் விரிந்து ஒரு தலை மேலும் ஒரு தலை கீழும் செல்லுகின்றது. இந்த நாடிகளின் மூலமாய் அந்தச் சத்து மேலே செல்லும்போது பசுமைவண்ணமாகவும் கீழ்ச் செல்லும்போது பீதவண்ணமாகவும் செல்லுகின்றது. மேலே செல்லுவதினால் ஜீவர்களுக்கு ஜீவிப்பும் அதின் சாரம் கெட்டுக் கீழே செல்வதினால் ஜீவிப்பின்மையும் உண்டாகின்றது. மேலே செல்வதில் ஜீவிப்புண்டாகுவதால் காத்தல் தொழிலை உணர்த்துகின்றது. மேலும் மேலே செல்லுகின்றதை விஷ்ணு வைகுந்தம்போகின்றா ரென்றும் கீழே செல்லுகின்றபோது க்ஷீராப்தியில் இருக்கின்றாரென்றும் சொல்லுகின்றது. கீழே செல்லும் நாடி முன் சொன்ன தொப்புள் நாடியுடன் கலப்புண்டாய் பிரமனுக்கு உஷ்ணத்தைத் தருகின்றது.
அன்றியும் இந்தச் சதுரமான பையின் வலப் பாகத்தில் ஒரு பையுண்டு. அந்தப் பையில் அக்கினி நிரம்பிக் காரணமாயிருக்கின்றது. அது புசித்த வஸ்துக்களின் சத்தைக் கிரகித்துக்கொண்டு அந்தசத்தை மலமாக இடது பாகத்தில் சேர்த்து விடுகின்றது. கிரகித்த சத்தை முன்சொன்ன க்ஷீராப்திப் பையில் சேர்க்கின்றது. இதை வடவாக்கினி என்று சொல்லுகின்றது. மேலும் இந்த வெள்ளை ஜலத்தை அக்கிரமமின்றிச் சமப்படுத்திப் பிரளயம் வாராது காத்துக் கொண்டிருக்கின்றது. இந்த உதராக்கினி குறைவுபட்டு க்ஷீராப்தியின் ஜலத்தின் தரங்கெடுமானால் நோயுண்டு.
இந்தப் பையாகிய ஸ்தானத்திற்குமேல் இரண்டரை அங்குலத்தில் இருதயத்தில் மலர்ந்த வாழைப்பூப்போல் ஒரு பையுண்டு. அது வெண்மையாயிருக்கும். இதைக் கைலாய மென்று சொல்லுகின்றது. இந்தப் பையுள் முன் சொன்ன காற்றில் பதினாயிரங் கோடி பங்கிலொரு பங்காக வெகு நேர்மையாய் அக்கினி மயமாய் ஒரு ஆவியிருக்கும். இதற்குக் காரணாக்கினி யென்று பெயர். இவ்வக்கினியைக் காலசந்திரருத்திரமூர்த்தி யென்பர். இப்பையின் அருகில் இடப் புறத்தில் மலர்ந்த தாமரைப் பூப்போல் ஒரு பையுண்டு. அந்தப் பை பசுமை வண்ணமாயிருக்கும். அதற்கும் முன் சொன்ன வெண்மைப் பைக்கும் ஒரு நாடியுண்டு. அதன் மூலமாய்க் காரணாக்கினி அதிகப்படுத்தாமலும் குறைவுபடுத்தாமலும் சமப்படுத்தி வைக்கும். இந்த மலர்ந்த பைக்கும் கீழிருக்கும் க்ஷீராப்திப் பைக்கும் ஒரு நாடியுண்டு. அதன் மூலமாய் அதற்கு உஷ்ணங் கொடுத்து நிலையில் வைக்கும். இதனால் ருத்திரனிடத்தில் விஷ்ணு பிறந்ததாய்ச் சொல்லுகின்றது. இந்த நாடி மூலமாக விஷ்ணு இடமாகிய ஜலத்திலும் பிரமனிடமாகிய இந்திரியத்திலும் உள்ள குற்றங்களைக் கண்டிப்பதால் ருத்திரனைச் சம்ஹார கர்த்தா வென்று சொல்வது.
இந்த அக்கினிப் பையில் குண்டலி வட்ட நரம்பு ஒன்று உண்டு. அதில் மூன்றாகப் பிரியும் கிளையுண்டு. அது மூல முதல் பிரமரந்திரம் வரையில் இடம் வலம் நடு வென்று கத்தரிமாறலாய்ப் பிராணாபானனுக்குஇடங்கொடுத்து ஊடுருவி நிற்கும். இந் நரம்புகளுக்குச் சோம சூரி யாக்கினி யென்று பெயர்.
இஃதன்றி இக் குண்டலி வட்ட நரம்பினடியில் நின்று இரண்டு நரம்பு, வலத்தில் அஞ்சு கவருடைய தலையாயும் இடத்தில் ஆறு தலையுடைய கவராயும் நிற்கின்றன. வலத்திலுள்ளது கணபதி யென்றும், இடத்திலுள்ளது சுப்பிரமணிய ரென்றும் பெயர் சொல்லுவது. மேற்படி ஐந்து கவருடைய நரம்பிற்கு அடியில் தலையெடுப்பான நரம்பு கீழ் நோக்கி கிருஷ்ணவர்ணமா யிருக்கும். இந்த நரம்பு இடைவிடாது அசைந்துகொண்டிருக்கும். இந்த அசைவால் அக்கினிப் பைக்கு ஆதாரம் உண்டாவதால் இதற்குக் கணபதியென்று பெயர். மேற்படி ஐந்து கவருடைய நாடிக்கு இடம் வலம் இரண்டிலும் சித்திதத்துவம் புத்திதத்துவம் உண்டு. இடத்திலுள்ள ஆறு கவருடைய நாடிக்குக் கீழ் அனந்த வண்ணமான நாடி ஒன்றுண்டு. இதற்கு மயூரமென்று பெயர். இந்த நாடியின் அசைவால் எழுபத்தீராயிரம் (72,000) நாடியும் அக்கிரமமின்றி நிலைபெறுகின்ற படியால், இதற்குச் சேனாதிபதி யென்றும் பெயர். மேலும் வலது புறத்து நாடிக்கு அறுபத்திரண்டு மாத்திரையும் இடதுபுறத்து நாடிக்கு நாற்பது மாத்திரையும் அளவு வித்தியாசமிருப்பதால், இவர்களைச் சோதரர்களாகச் சொல்வதுமன்றி, மேற்படி ருத்திராம்சமாகவே சொல்லுகின்றது.
இருதயத்திற்குமேல் இரண்டரை அங்குல இடமான கண்டத்தில் மகேசுவரனும், அதற்குமேல் இரண்டரை அங்குல அண்ணாக்கில் சதாசிவமும், அதற்குமேல் இரண்டரை அங்குல உயரத்தில் புருவமத்தியில் விந்துவும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் நாதமும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் பரவிந்துவும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் பரநாதமும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் திக்கிராந்தம் அதிக்கிராந்தம் துவாதசாந்தம் முதலானவைகளும், அதீதத்தில் சுத்தசிவமு முள. மகேசுவர ஸ்தானம் முதல் விந்துஸ்தானம் வரையிலும் முன் போல் இடம் நாடி தொழில் வண்ணம் முதலியவு முள்ளன. நாதஸ்தானந்தொட்டுத் துவாதசாந்தம் வரையில் அனுபவவெளியாகிய ஆகாச பேதமயமா யிருக்கும். அதற்குமேல் அதிகாரண மாத்திரமாய் ஆன்மானுபவத்தில்விளங்கும்.
மேலும் பிரமஸ்தானந் தொடங்கிச் சுத்தசிவஸ்தானம்வரையில் ஒரு ஸ்தம்பம், இருதயம் வரையில் வாயுநாடி வண்ணமாயும் அதற்கு மேல் அக்கினி வண்ணமாயும் இருக்கும். இது அடியிற் பருத்து வர வர நேர்மையாய், இந்திரிய கரணங்களுக்குப் புலப்படாமல் அணுவுக்கணுவாய், ஜீவனுக்கும் புலப்படாமல் அகண்டமாய், ஆன்மக்காட்சியில் அருகித் தோன்றுவதாய், இரண்டற நிற்கும். இதற்குச் சிவாகார பூரண ஸ்தம்பம் என்று பெயர்.
முன் சொன்ன இருதயாக்கினிப் பை அக்கிரமமாய் விரிந்து, விசேஷ அக்கினி ஜ்வாலை விசிரிம்பித்துக் கீழிருக்கும் க்ஷீராப்திப் பையிலிருக்கும் ஜலத்தைச் சுருட்டிக்கொள்ள, ஜீவனுக்கு மரண காலம் நேரிடும். மேற்படி பை விரிவதற்கு ஆதாரம் அருந்தல் பொருந்தல். இவை சமமானால் மிருத்தியு வராது.
மனித தேகத்தில் கடவுள் காரியப்படுவது
இந்த மனிததேகத்தில் புருவ முதலாகிய இடங்களில் உரோமம் தோன்றி நெற்றி முதலாகிய இடங்களில் உரோமம் தோன்றா திருப்பதற்கு நியாயம் யாதெனில்: இத்தேகம் பாதாதி பிரமாந்திர பரியந்தம் வாயுவாலாகிய தேகம். மேற்படி வாயுவினுடைய பிருதிவி காரியமே தேக வடிவம். ஆதலால், வாயுவின் வர்ணம் செம்மை, கருமை நிற உரோமம் பிருதிவியின் கூறு. தேகத்தில் பிருதிவி வாயு இரண்டும் முக்கிய காரணமானதால், செம்மையும் கருமையுமாகிய உரோமம் உண்டாயிற்று. இது நிற்க. நரை உண்டாவது தத்துவக் கெடுதியால். இத்தேகத்தில் 27 இடங்களில் வாயுவில் பிருதிவி தங்கும். அவசியம் மேற்படி இடங்களில் ஆண்பாலுக்கு உரோமம் தோன்றும். மேற்படி இடங்கள் எவை எனில்:- கபாலம் 1, புருவம் 2, கண்கீழ் இமை 2, மேலிமை 2, நாசிக்கு உட்புறம் 2, மீசை 1, மோவாய் கன்னம் 2, காதுக்குட்புறம் 1, இருதயம் 1, கைம்மூலம் 2, உந்தியின் மேல் ரேகை 1, அடிவயிறு 1, லிங்கத்தடி 1, புட்டத்தின் கீழ்ப்புறம் 1, தொடை 2, முழந்தாள் 1, பாதத்தின் மேலிடம் ஒன்று, மேற்படி விரலின் மேலிடம் பலவும் 1, முதுகு 2, விலாப்புறம் 2, முழங்கைக்குங் கீழ் 2, கைவிரலின் மேற்புறம் 1 ஆக 27. இவை அல்லாது மற்ற இடங்களில் தோன்றுவது தத்துவக் கெடுதி. தத்துவங்களின் உட்புற மலங்களே வாயுவின் பிருதிவி. ஆதலால், மேற்குறித்த இடங்களில் அக்கினியின் காரிய மில்லாததினால் உரோமம் உண்டாகின்றது. அக்கினி காரியப்பட்ட இடங்களில் தோன்றியும் தோன்றாமல் அருகியிருக்கின்றது.
நெற்றியில் தோன்றா திருப்பது மேற்படி இடத்தில் ஆன்ம விளக்கம் விசேஷ முள்ளது. அதைப் பற்றி மேற்படி இடத்திற்கு விந்துஸ்தானம் என்றும், அறிவிடம் என்றும், லலாடம் என்றும், முச்சுடரிடம் என்றும், முச்சந்திமூலம் என்றும், நெற்றிக்கண் என்றும், மஹாமேரு என்றும் புருவமத்தி என்றும், சித்சபா அங்கம் என்றும் பெயர். ஆதலால், விந்து என்பதே ஆன்மா. விந்துவின் பீடம் அக்கினி. இந்த இரண்டினது காரியமே பிரகாசமாகிய அறிவின் விளக்கம் ஆதலால், உரோமம் அருகி யிருக்கின்றது. பூர்வத்தில் விந்துவும், உத்தரத்தில் நாதமும் இருக்கின்றன. விந்து ஆன்மா, நாதம் பரமான்மா. நாதத்தோடு விந்து சேர்தலால், விந்து சத்தியும், நாதம் சிவமும் ஆகின்றன. விந்துவுக்சூ உத்தர நியாயம் பூர்வ நியாயமாவது எல்லாத் தத்துவங்களுக்கும் புறத்தும் அகத்தும் மற்றும் விளங்கி, தத்துவங்களைத் தன்வசப்படுத்தியும் தொழில்களைச் செய்வித்தும் தனித்து நின்றும் தன்னோடு தத்துவங்களைச் சேர்க்கின்ற படியால், விந்து சத்தனாயும் தத்துவங்கள் சத்தியாயும் இருக்கும். மேலும் ஆன்மாவுக்குச் சகல விளக்கமாகிய சாக்கிர ஸ்தானம் லலாடம், ஆதலால், விசேடம் சிறந்தது லலாடத்தில் மூக்குநுனியாகியபுருவமத்தி. இதற்கு அனுபவ சித்திகள் திரயோதசாந்தம் வரையிலு முண்டு.
கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால்
அரைசது மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
பேருறு நீலப் பெருந்திரை அதனால்
ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
பச்சைத் திரையால் பரவெளி அதனை
அச்சுற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
செம்மைத் திரையால் சித்துறு வெளியை
அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
பொன்மைத் திரையால் பொருளுறு வெளியை
அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை
அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
கலப்புத் திரையால் கருதனு பவங்களை
அலப்புற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
- திருஅருட்பா, அருட்பெருஞ்ஜோதி அகவல் 813-826
திருஅருட்பிரகாச வள்ளலார்
No comments:
Post a Comment